ஸ்ரீரங்கம் கோவில் அருகே பட்டாசு வெடிக்கத் தடை... காரணம் "அதுவல்ல"!
ஸ்ரீரங்கம்: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகே பட்டாசுகள் வெடிக்க தீயணைப்புத் துறையினர் தடை விதித்துள்ளனர். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால் அதுதொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. எனவே மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், அங்கு பட்டாசு வெடித்தால் விபத்து ஏற்பட்டு விடும் என்பதால், பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் ஜெயலலிதா. தற்போது சிறைக்குப் போய் விட்டார். எம்.எல்.ஏ. பதவியும் போய் விட்டது. அவரது விடுதலைக்காக ஸ்ரீரங்கத்தில் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அடுத்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த அரசு முடிவு செய்து, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது, கோவில் கோபுரங்களில் சிதைந்திருக்கும் சிலைகளை புதுப்பிக்கவும் மற்றும் சிலைகளுக்கு வர்ணம் பூசுதலும் நடைபெற்று வருகிறது. அதற்காக கோவில் கோபுரங்களில் மரக்கட்டைகளைக் கொண்டு, கயிற்றால் சாரம் கட்டி உள்ளார்கள். அந்த கோபுரங்களை மறைத்து மரக்கட்டைகளில் துணிகள் சுற்றி இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. அந்த உயரத்திற்கு மரக்கட்டைகளால் சாரம் அமைத்து பச்சை துணியை சுற்றி இருக்கிறார்கள். அந்த ராஜகோபுரத்திலும் திருப்பணி வேலைக்காக வர்ணம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வருகிற 22-ந் தேதி தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் வாணவெடிகள் உள்ளிட்ட விதம் விதமான பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள். ராக்கெட்டுகள் தூள் பறக்கும். இப்படி வெடிக்கும்போது திருப்பணி வேலைகள் நடந்து வரும் கோபுரங்களில் சுற்றி கட்டப்பட்டிருக்கும் துணி மற்றும் சாரங்களில் தீ பிடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
சமீபத்தில் கூட அதிமுகவினர் காளையார்கோவில் கோபுரம் அருகே பட்டாசு வெடித்தபோது சாரத்தில் தீப்பற்றி எரிந்து போனது. எனவே முன்னெச்சரிக்கையாக ஸ்ரீரங்கம் கோவில் பகுதியில் இருப்பவர்கள் வானில் பறந்து வெடித்து சிதறும் வகையான வெடிகளை வெடிக்க வேண்டாம் என்று ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.