திருத்தணி மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 40 பேர் காயம்
திருத்தணியில் உள்ள சுப்ரமணியசுவாமி மலைக்கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிழந்தார். 40 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார், 40 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை, செல்லூரில் இருந்து சுமார் 60 பேர் தனியார் பேருந்தில் சுற்றுலா வந்துள்ளனர். கோவில்களில் தரிசனம் முடித்து விட்டு திருத்தணி மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கே சுவாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பினர். பேருந்து கீழே இறங்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் கீழேயிருந்த தூண் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் பேருந்தின் அடியில் சிக்கி ஆட்டோ டிரைவர் மதன் என்பவர் உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பேருந்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த திருத்தணி கோட்டாட்சியர் ஜெயராமன், மீட்புப்பணிகளை பார்வையிட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.