கூடலூர் அருகே 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பலி.. 25 பேர் படுகாயம்
கூடலூர் அருகே சுற்றுலா பேருந்து 40 அடி பள்ளத்தில் விழுந்து 5 பேர் பலியானார்கள்.
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சொகுசுப் பேருந்து ஒன்றில் பெங்களூரில் இருந்து சுற்றுலாப் பயணிகள் 30 பேர் உதகைக்கு சென்றனர். பின்னர் நேற்றிரவு அவர்கள், ஊட்டியிலிருந்து மீண்டும் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மடிக்கேரி செல்வதற்காக, கூடலூர் வழியாக புறப்பட்டனர். அப்போது கூடலூருக்கு முன்பாக சுமார் 6 கி.மீ.தொலைவில் உள்ள தவளைமலை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அங்கு முன்னால் இருந்த ஒரு வாகனத்தை முந்தி செல்ல பேருந்து முயன்றது.
அது குறுகலான இடம் என்பதால், கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூடலூர் போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இரவு நேரம் என்பதால் மீட்பு பணியினில் ஈடுபட முடியாமல் தவித்தனர். பின்னர் டார்ச் லைட் உதவியுடன் மீட்பு பணி தொடங்கி, உயிரிழந்தவர்கள், மற்றும் படுகாயமடைந்தவர்களை மீட்டனர். உயிருக்கு போராடிய படுகாயமடைந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி கூடலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.