அரசு பேருந்தில் 500 ரூபாய் நோட்டு வாங்க மறுத்த நடத்துனர்.. பாதி வழியில் தவித்த பயணி !
அரசுப்பேருந்தில் பழைய 500 ரூபாய் நோட்டு வாங்க மறுத்ததால் டிக்கெட் கட்டணம் பெற முடியாமல் பயணி ஒருவர் சிரமப்பட்டார்.
கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து சென்னை சென்ற அரசுப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரை நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 8ம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகளில் பணத்தை பொதுமக்கள் மாற்றி செல்கின்றனர்.
இந்த நிலையில் நெய்வேலியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், சென்னையில் மேல் சிகிச்சை மேற்கொள்ளவதற்காக கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து புறப்பட்டு சில கிலோ மீட்டர் தாண்டிய பிறகு நடத்துனர் டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார். அப்போது லோகநாதன், தன்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது, சில்லரையாக பணம் கொடுங்கள் என்று நடத்துனர் கேட்டுள்ளார். அதற்கு காலையில் சில்லரை மாற்ற முடியவில்லை. உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு மருத்துவரை சந்திக்க செல்கிறேன். என்னிடம், 500 ரூபாய் நோட்டுகளை தவிர சில்லரையாக 80 ரூபாய் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். இருவருக்கும் கொஞ்ச நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடத்து
வேறு வழியில்லாமல் லோகநாதனை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார் நடத்துனர். இதுகுறித்து லோகநாதன் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் இது கும்பகோணம் கோட்ட போக்குரவத்துக் கழக பேருந்து அங்கு சென்று புகார் கூறுங்கள் என்று தெரிவித்துள்ளனர். கையில் பணம் இருந்தும் அதை செலவு செய்யவு முடியவில்லை என ஆதங்கப்பட்டார் லோகநாதன்.