சேலம்-மதுரை பஸ்சில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபோது சுருண்டு விழுந்து கண்டக்டர் சாவு
சேலம்: டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் கண்டக்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் நகரிலுள்ள ஜான்சன்பேட்டை கிளையை சேர்ந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்தக் கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஓன்று சேலத்தில் இருந்து மதுரை நோக்கி கிளம்புவதற்காக வியாழக்கிழமை நள்ளிரவில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
அந்த பஸ்சில் சேலம் வின்சென்ட் ஏரியாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றினார். நடத்துனராக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த பொன்னுசாமி (55) என்பவர் பேருந்திலிருந்த பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, நடத்துனர் பொன்னுசாமி திடீரென மயக்கமடைந்து சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து ஓட்டுநர் சுரேஷ், பஸ்சிலிருந்த பயணிகள் உதவியோடு, பொன்னுசாமியை தூக்கிச் சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பொன்னுசாமி கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
பொன்னுசாமி மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.