நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு.. தினகரன் ஆதரவு அரசு பஸ் டிரைவர் தீக்குளிக்க முயற்சி
பணி கொடுக்காமல் இழுத்தடிப்பதாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
நெல்லை: தினகரன் அணியில் இருப்பதால் வேலை கொடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் காசிதர்மத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இது மாநிலம் முழுவதும் மக்களை கொதிப்படைய செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார் தீத்தடுப்பு கருவிகளுடன் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை அருகே ராமையன்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவரான பாஸ்கரன் என்பவர் பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தார். சில நிமிடங்களிலேயே தான் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றார்.
இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பாய்ந்து சென்று அவரை மடக்கினர். அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், நான் அரசு போக்குவரத்துக் கழக கேடிசி நகர் பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறேன்.
நான் அதிமுக டிடிவி தினகரன் அணியில் இருப்பதால் போக்குவரத்து கழக கிளை மேலாளர் பணி வழங்க மறுக்கிறார். இதனால் சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். தினமும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணிமனைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகிறேன்.
எனவே தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வாளகத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.