பஸ் கட்டண உயர்வு வாபஸ் கிடையாது.. கதவைச் சாத்தினார் அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசு பேருந்து கட்டண உயர்வு வாபஸ் பெறப்படாது என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
சென்னை: அரசு பேருந்து கட்டண உயர்வு நியாயமானதுதான், அதை திரும்ப பெறும் திட்டம் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார்.
எரிப்பொருள் உயர்வு, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டணம் உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி பேருந்து கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்சமாக ரூ.3 உள்ள கட்டணத்தை ரூ.5 ரூ-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வெளியூர்களுக்கு அந்தந்த ஊரின் தூரத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டணத்தில் 60 சதவீதம் அளவுக்கு கடுமையாக உயர்த்தப்பட்டதால் அதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசு பேருந்து கட்டண உயர்வு வாபஸ் இல்லை. போக்குவரத்து கட்டண உயர்வு நியாயமானதே என்றார் விஜயபாஸ்கர்.