இதே நிலை நீடித்தால் போராட்டங்களை நிச்சயம் தூண்டிவிடுவோம் - ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் கவனமே தவிர மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துவதில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நிலக்கரி கொள்முதலில் ஊழல், குட்கா ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி அரசு என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் நடைபெற்று வரும் ஆர்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஈவு, இரக்கமின்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
குட்கா ஊழல் பற்றி நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குட்கா புகழ் விஜயபாஸ்கர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விஜயபாஸ்கர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்.
நிலக்கரி கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மையை நிரூபிக்க திணறும் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேருந்து கட்டணத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இது ஜல்லிக்கட்டு புரட்சி போல அரசுக்கு எதிரான போராட்டம். நாங்கள் போராட்டத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துள்ளது இந்த அரசு. பஸ் டிக்கெட் அச்சடிப்பில் ஊழல் நடந்துள்ளது. உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் திமுகவினர் மீண்டும் போராட்டம் நடத்துவோம். இனி போராட்டத்தை தூண்டுவோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.