பஸ் ஸ்டிரைக் எதிரொலி.. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் காட்டில் காசு மழை!
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை இன்றே தொடங்கி விட்ட நிலையில் பல இடங்களில் பஸ் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களில்கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 22ஆம் தேதி அறிவித்தனர். ஆனால் தற்போது இன்றே போராட்டம் பல இடங்களில் தொடங்கி விட்டது.
பொதுமக்கள் அவதி...
சென்னை, திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ்களை இயக்காமல் தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தவிப்பு...
தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் கிராம மக்கள் நகரங்களுக்கு வந்து விட்டு ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனராம்.
கூடுதல் கட்டணம்...
பல இடங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களுக்கு கடு்ம் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வழக்கமாக கேட்பதை விட கூடுதலாக கேட்கிறார்களாம் டிரைவர்கள். பஸ் கிடைக்காத நிலையில் இந்த ஆட்டோக்கள நம்பித்தான் உள்ளனர் மக்கள். எனவே கேட்கும் தொகையைக் கொடுத்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனராம்.
மினி பஸ்களையும் காணவில்லை...
சென்னை நகரில் ஓடும் மினி பேருந்துகள் பல இடங்களில் ஓடவில்லை. நிறுத்தி விட்டனர். இதனால் மினி பேருந்துகளை அதிக அளவில் பார்க்க முடியவில்லை.
அதிருப்தி...
நாளை ஸ்டிரைக் என்று கூறிய நிலையில் இன்றே ஸ்டிரைக் தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று விடுமுறை நாள். எனவே ஷாப்பிங் செல்லக் கிளம்பியோருக்குத்தான் பெரும் கஷ்டமாகி விட்டது.
ரயில்களில் கூட்டம்...
சென்னை நகரில் மிகக் குறைந்த அளவே பஸ்கள் ஓடுவதால் கிடைத்த பஸ்களில் மக்கள் படிகளில் தொங்கியவாறு பயணம் மேற்கொள்கின்றனர். ரயில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.