போக்குவரத்து அமைச்சரின் மாவட்டத்திலேயே ஸ்தம்பித்த பஸ் போக்குவரத்து.. மக்கள் கடும் அதிருப்தி
கரூர்: போக்குவரத்து துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர், கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 15 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.
ஊதியம் ஒப்பந்தம் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 1/2 வருடங்களாக தமிழக அரசிடம் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். மேலும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசையும், போக்குவரத்து துறையின் மெத்தன போக்கையும் கண்டித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் கோவில்பட்டியில் தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் திருச்சி, கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் மாவட்டமான கரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் அன்றாட வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர் நகரில் இருந்து இயங்கும் பேருந்துகளில் சுமார் 15 சதவிகித பேருந்துகள் மட்டுமே தற்போது இயங்கிவருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாலும், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஊரிலேயே இந்த போக்குவரத்து வேலைநிறுத்ம் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கரூர் சுங்ககேட்டில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.