தினக்கூலிக்கு தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேவை- அழைக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்
தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு நாளை தேர்வு நடைபெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை: பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்காலிகமாக பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துனர்களை தினக்கூலி அடிப்படையில் நாளை முதல் தேர்வு செய்ய உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மதியம் முதல் பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அவசரத்திற்கு இயக்கம்
தனியார் ஊழியர்களைக் கொண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களை வைத்தும், பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பணிக்கு அழைப்பு
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான பேட்ஜ் மற்றும் உரிமம் உள்ளவர்கள் உடனடியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளரை உரிய சான்றிதழ்களோடு அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலி அடிப்படையில் தேர்வு
சென்னையில் போக்குவரத்து இயக்கம் குறித்து ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் அரசு பேருந்துகளை இயக்க தினக்கூலி ஓட்டுனர்கள் நாளை தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
யாருக்கு முன்னுரிமை
கனரக வாகனங்களை இயக்கும் லைசென்ஸ் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர்களுடைய பணத்தை நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பேச்சுவார்த்தையை மதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளனர் என்றும் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.