தமிழகத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து 2வது நாளாக நேற்றும் முடக்கம்
தூத்துக்குடி: தமிழகத்தின் பல பகுதிகளில் 2வது நாளாக நேற்றும் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதாலும், போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்ததாலும், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் காலை அரசு, தனியார் பேருந்துகள் குறைந்த அளவில் இயங்கின. மாலையி்ல் பஸ்கள் மீது கல் வீசப்பட்டதால் பஸ் போக்குவரத்து மறுபடியும் முடங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் அதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பல இடங்களில் பஸ் மறியல், ரயில் மறியல் உள்ளிட்டவைகளும் நடந்தன. பல இடங்களில் அதிமுகவினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் சில பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மாலையில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் முக்கிய ஊர்களுக்கும், கிராமபுறங்களுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவியாய் தவித்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் இரவு நேரங்களில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் பஸ் இயக்கம் படிப்படியாக தொடங்கியது.
அரசு பஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயக்கப்பட்டன. தனியார் பஸ்களும் வழக்கம்போல் ஓடின. கடைகளும் வழக்கம் போல் திறந்திருந்தன.
ஆனால் மாலை நெல்லையிலிருந்து புதுக்கோட்டை சென்ற பஸ் மீது அங்கிருந்த அதிமுகவினர் கல் வீசி தாக்கியதால் பஸ் கண்ணாடி சுக்கு நூறாக நொருங்கியது. இதில் டிரைவர் மீதும் கல் பட்டதால் அவர் காயம் அடைந்தார்.
இதனால் போக்குவரத்து அதிகாரிகள் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சை திருப்பி கொண்டு வரும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். இதன் காரணமாக மீண்டும் போக்குவரத்து முடங்கியது.
இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைமை காணப்பட்டது. அதேசமயம் கடைகள் பெரும்பாலான இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அதிமுகவினர் போராட்டம் காரணமாகவும், பலர் எதற்கு வம்பு என்று கடைகளைத் திறக்காத நிலையும் காணப்பட்டது.