நெல்லையில் "கரகாட்டக்காரன்" பஸ்.. கழன்று ஓடிய சக்கரம் - அலறிய பயணிகள்!
நெல்லை: திருநெல்வேலியில், பேட்டை அருகே அரசு பஸ் சக்கரம் தனியாக கழன்றி ஓடியதால் உயிர் பயத்தில் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் பாபநாசம் நெல்லை பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலானவை போதிய பராமரிப்பின்றி ஓட்டை உடைசலான நிலையில் இருக்கின்றன. இதனால் இந்த பஸ்கள் பாதி வழியில் நிற்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் காலை பாபநாசத்திலிருநது நெல்லை சாட்டுபத்து வழியாக அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பஸ் சுத்தமல்லியை அடுத்த பெரியார் நகர் அருகே வந்த போது திடீரென முன்பக்கம் வலபுறத்தில் இருந்த அச்சு உடைந்து சக்கரம் தனியாக கழன்று ஓடியது. இதனால் பஸ் தறுமாறாக ஓடவே பயணிகள் அலறினர். பயங்கர சத்தத்துடன் டிரம் உரசியபடி சென்ற பஸ் அருகில் இருந்து மணலில் புதைத்து நின்றது. தனியாக கழன்று ஓடிய சக்கரம் அங்குள்ள ஒரு கம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் சுவர் பலத்த சேதம் அடைந்தது.
இந்த சத்தத்தை கேட்டு பெரியார் நகர் பொதுமக்கள் அங்கு விரைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். பஸ் தறுமாறாக ஓடியபோது எதிரே வாகனங்களோ, பொதுமக்களே வராததால் அதிர்ஷ்டவசமாக பலத்த உயிர் சேதமும் பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சுத்தமல்லி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகளை சமதானப்படுத்தி அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.