20 தமிழர் படுகொலை: 4வது நாளாக ஆந்திர பஸ்கள் நிறுத்தம்- போலீஸ் பாதுகாப்போடு இயக்க அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: ஆந்திர என்கவுண்டரில் 20 தமிழர்கள் கொல்லப் பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் நிலவுவதால், 4வது நாளாக ஆந்திர மாநில பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் கடந்த 6-ந்தேதி செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தியதாக குற்றஞ்சாட்டி, 20 தமிழக கூலித் தொழிலாளர்களை ஆந்திர மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது திட்டமிட்ட படுகொலை எனக் கூறி, தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு சென்ற பேருந்துகள் தாக்கப் பட்டன.
இதனால், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர், விஜயவாடா, திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே கடந்த 7-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப் பட்டது.
ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த பேருந்துகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப் பட்டது. ஆனால், அரசு பேருந்துகள் மட்டும் தொடர்ந்து ஆந்திராவிற்கு இயக்கப் பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று இரவு கூட்டம் அதிகம் இல்லாததால் ஆந்திராவுக்கு செல்ல இருந்த தமிழக அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
சென்னை கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டுள்ள ஆந்திர பேருந்துகளை இன்று உரிய போலீஸ் பாதுகாப்போடு ஆந்திரா கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 165 பஸ்கள் (209 சேவைகள்) இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தில் 40 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் 3 நாட்களாக மாற்று உடை கூட இல்லாமல் இங்கேயே தான் தங்கி இருக்கிறார்கள். தங்களுடைய சொந்த பணத்தில் தான் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
எங்களுடைய அதிகாரிகள் போலீஸ் உத்தரவு வழங்கினால் நீங்கள் பஸ்சை இயக்க ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டனர். இதுதொடர்பாக எங்களுடைய போக்குவரத்து கழக செயல் இயக்குனர், சென்னை வந்து போலீஸ் ஐ.ஜி.யிடம் பேசி இருக்கிறார். அநேகமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி பஸ்கள் இயக்கப்பட்டால் தமிழக போலீசார் ஆந்திரா எல்லை வரை வருவார்கள்' என்றார்.