"பந்த்" நடந்தாலும் பேருந்துகள் இயங்கும்... அரசு போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
சென்னை : புதன்கிழமை (02-09-2015) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (02-09-2015) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அனைத்து சாலைப் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர பிற தமிழக போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கங்களும் பங்கேற்க உள்ளன. இதனால், அரசு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம் இயங்கும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே பங்கேற்பதாகவும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அதிகார்கள் கூறியுள்ளனர்.
மேலும், தடையின்றி பேருந்துகளை இயக்கும் வகையில் சேம ஊழியர்கள், விடுப்பில் உள்ளவர்களும் பணிக்கு வருமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில், பேருந்துகள் இயக்கம் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.