என்ன "பீப்".... க்கு' கணக்கெடுத்தீங்க... இப்படிப் பேசியது அதிமுக பெண் எம்.எல்ஏ.!
புவனகிரி, சிதம்பரம்: கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் ராஜேவலிடம் புவனகிரி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம் தரக்குறைவாக பேசித் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. இதைக் கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புவனகிரி வட்டாட்சியராக இருப்பவர் ராஜவேல். இவரிடம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னால் அமைச்சருமான செல்வி ராமஜெயம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
சமீபத்திய கன மழை பெருவெள்ளத்தால் கடலூர் மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ள நிவாரணம் குறித்து வட்டாட்சியரிடம் எம்.எல்.ஏ கேட்டுள்ளார். பல பகுதிகளில் வெள்ள நிவாரணமே வரவில்லை. எங்களுக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்றே நடக்கிறீர்களா என்று ஆரம்பத்தில் நிதானமாகப் பேசுகிறார்.
அதற்கு வட்டாட்சியர் மேடம் நீங்க எதுவா இருந்தாலும் கலெக்டரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்கிறார். இதற்கு எம்.எல்.ஏ. என்னங்க நீங்க, எதுக்கெடுத்தாலும் கலெக்டரிடம் பேசுங்க என்கிறீர்கள் என்று கோபமாக கேட்கிறார். மேலும் என்ன மயித்துக்கு கணக்கெடுத்தீங்க என்றும் சற்று தரகக்குறைவாக அதிகாரியை திட்டுகிறார். அத்துடன் செல்போன் பேச்சு கட் ஆகிறது.
இந்த விவகாரம் புவனகிரியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏவைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் வருவாய்தறை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 2 மாதமாக கடுமையாக பணியாற்றி வரும் வட்டாட்சியரை திட்டியதை கண்டித்தும், செல்வி ராமஜெயம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு செவ்வாய் மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்துறை ஊழியர்கள் சங்க புவனகிரி வட்ட தலைவர் அமர்நாத் தலைமை தாங்கினார். சிதம்பரம் வட்ட தலைவர் தமிழ்ச் செல்வன், வட்டாட்சியர்கள் புவனகிரி ராஜவேல், சிதம்பரம் அரங்கநாதன் உள்ளிட்ட ஊழியர்கள் சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அதிமுக எம்எல்ஏவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.