சுடச்சுட “பிரியாணி” - அனல் பறக்கும் பிரசாரம்... சூடு பறக்கும் உள்ளாட்சி இடைத் தேர்தல் களம்!
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் ஜூரம் சூடு பறக்க துவங்கி விட்டது.
இந்த இடைத் தேர்தலில் முக்கியக் கட்சிகளாக அதிமுக, பாஜக மட்டுமே போட்டியிடுகின்றன.
பிரியாணியும், முட்டையும், பிரச்சாரமுமாக பரபரக்கும் பிரச்சாரக் களத்தின் சில கலகல தொகுப்புகள்தான் இங்கே.
தீவிரப் பிரச்சாரத்தில் அதிமுக:
இந்த இடைத்தேர்தலில் போட்டி கடுமையாக இல்லாவிட்டாலும் கூட அதிமுக தரப்பி்ல் தீவிர பிரச்சாரம் செய்கிறாரகள்.
பணம் தருவதாக புகார்:
பல இடங்களில் பணம் கொடுப்பதாக கூட புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக கோவையில் மோதலும் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் போல்:
சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்வது போல அதிமுகவினர் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர்.
முதல்வர் பிரச்சாரம்:
தூத்துக்குடியில் கூட நேற்று முதல்வர் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து விட்டுப் போனார்.
கோவையிலும் பரபர:
அதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்திருந்தனர். இன்று கோவையிலும் அதே போல பிரமாண்ட பிரசாரத்தை ஜெயலலிதா செய்யவுள்ளார்.
கிருஷ்ணகிரி இடைத்தேர்தல்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெரிகேபள்ளி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகின்றது.
மும்முனைப் போட்டி:
இதில் அதிமுக சார்பில் முருகேசன் என்பவரும், பாஜக சார்பில் வெங்கடாசலமும், சுயேட்சையில் விஜயன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.
கவுன்சிலர் தேர்தல்:
அதிமுக சார்பில் முன்னால் ராஜ்யசபா எம்.பி பெருமாள், கெரிகேப்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலுக்கு இவர்தான் "இன்சார்ஜ்".
கோழி பிரியாணி மணக்குது:
கெரிகேப்பள்ளி வாக்காளர்களுக்கு தினந்தோறும் குவாட்டரும், கோழி பிரியாணியும் தனது கையால் பறிமாறி ஸ்பெஷலாக கவனித்து வருகிறாராம் எக்ஸ் எம்.பி.
ஓட்டை மாத்திடாதீங்க:
பெண்களிடமும், ஆண்களிடம் "ஓட்டை மாத்தி போட்டுறாதீங்க" என்று பிரியாணி பறிமாறிய கையாலேயே கும்பிடு போட்டு வாக்கு சேகரித்து வருகின்றார் இவர்.
களை கட்டிய தேர்தல் களம்:
மொத்தத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இணையாக இடைத்தேர்தலும் மணக்கும் பிரியாணியும், மண்டையை உடைக்கும் குடுமிப்படி சண்டைகளுமாக களைக் கட்டியுள்ளது நிச்சயம்.