கிருஷ்ணசாமி வைத்த செக்.. அமைச்சர் ராஜலட்சுமியை வைத்து தகர்த்து.. நாங்குநேரியில் கரையேறிய அதிமுக!
Recommended Video
சென்னை: கூட்டணியில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு நாங்குநேரியில் ஒரு செக் வைத்தார்.. ஆனால், அதை அமைச்சர் ராஜலட்சுமியை கொண்டு தகர்த்து, கிருஷ்ணசாமிக்கு பதில் செக் வைத்துள்ளது அதிமுக!
ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் கிருஷ்ணசாமிக்கு அதிமுக ஆதரவு தந்தது. ஆனாலும் இந்த தேர்தலுக்கு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேறுவது, 7சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையை வெளியிடுவது போன்ற விஷயங்களில் அதிமுகவுடன் இடைவெளி அதிகமானது.
இது சம்பந்தமாக முதல்வரிடம் கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், முதல்வர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இதற்கு வரவில்லை போல தெரிகிறது. அப்போதிருந்தே, அதிமுகவிடம் இருந்து ஒதுங்கி இருக்க ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி.
நாங்குநேரி
இந்த சமயத்தில்தான் சட்டசபை இடைத்தேர்தல் நெருங்கியது.. நாங்குநேரியை காரணம் காட்டி ஆளும் தரப்புக்கு நெருக்கடி தந்தது புதிய தமிழகம். இதற்கு காரணம், நாங்குநேரியில் இவர்களுக்கென்று ஒரு தனி ஆதரவு உள்ளது.
புறக்கணிப்பு
7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி அரசாணை வெளியிடாததை கண்டித்து பருத்திக்கோட்டை நாட்டார்கள் சங்கம் சார்பில் நாங்குநேரி இடைத்தேர்தல் புறக்கணிப்பு மற்றும் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சமயத்தில், அந்த சமுதாயத்தினர் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் யாருமே ஓட்டு போட போகவில்லை. எல்லாரும் காலையில் வழக்கம்போல வயல்களுக்கு கிளம்பி போய்விட்டனர். இதனால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை.
சில காலமாக, நடந்த பல தேர்தல்களில் தேர்தல் புறக்கணிப்பு முழக்கங்கள் ஆங்காங்கே எழுந்தாலும் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் ஒற்றுமையாக நின்று தேர்தலை புறக்கணித்தது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.. அதிமுகவுக்கு இது சறுக்கலை தந்துவிடுமோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
ராஜலட்சுமி
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு சளைத்தவர் இல்லை.. கிருஷ்ணசாமி தரப்பிலிருந்து வந்த சிக்கலை,அமைச்சர் ராஜலட்சுமியை வைத்து கச்சிதமாக ஈடேற்றினார். காரணம்.. ராஜலட்சுமியின் சமூகம்.. தங்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கையை இந்த சமயத்தில் இவர்கள் பயன்படுத்தி கொண்டு கூட்டணி தர்மத்தையும் மீறினார் கிருஷ்ணசாமி. ஆனால் நம் எடப்பாடியார் சளைத்தவர் இல்லை.. இதே ராஜலட்சுமியை வைத்து கிருஷ்ணசாமியின் இழப்பை சரிக்கட்டியது அதிமுக!
முகத்தில் புன்னகை
பிரச்சாரம் முழுவதும் ராஜலட்சுமி தீவிரமாக பணியாற்றினார். முதல்வர் வந்து பேசியபோதும், வேட்பாளரின் பிரச்சாரத்திலும் ராஜலட்சுமி முக்கியமாக இருந்தார். இன்று வேட்பாளர் நாராயணன் வெற்றிச் சான்றிதழை தேர்தல் அதிகாரியிடமிருந்து வாங்கியபோது அத்தனை பெருமிதம், புன்னகை அமைச்சர் ராஜலட்சுமி முகத்தில் தவழ்ந்தது. இதன் மூலம் கிருஷ்ணசாமி செக் வைத்ததை தகர்த்ததுடன், தேவேந்திர குல வேலாளருக்கு முக்கியத்துவம் தரும் கட்சிதான் என்பதையும் அதிமுக மீண்டும் நிரூபித்துள்ளதாகவே தெரிகிறது!