வெற்றி கட்டாய தேவை.. 2 தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்குதான் அக்னி பரிட்சை.. ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை: நடைபெற்று முடிந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள், அதிமுகவைவிடவும், திமுகவுக்குதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இன்னும் சொல்லப்போனால், திமுகவுக்கு இந்த தேர்தல் வருங்கால வாய்ப்புக்கான, அக்னிபரிட்சை போன்றது என்ற கருத்தும் நிலவுகிறது.
அது ஏன் அப்படி என்று கேட்கிறீர்களா? அரசியல் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.
திமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்
திமுக கூட்டணி போட்டி
நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் ராஜினாமா செய்துவிட்டு கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மீண்டும் காங்கிரசுக்கு அந்த தொகுதியை ஒதுக்கியது திமுக. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தியும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரனும் களமிறங்கினர்.
திமுக கூட்டணி தொகுதிகள்
அதாவது, இந்த இரண்டு தொகுதிகளுமே, இதற்கு முன்பாகவும் திமுக கூட்டணி வசமிருந்த தொகுதிகள். அந்த வகையில் இரு தொகுதிகளில் ஒன்றை இழந்தால் கூட, அது திமுகவுக்குத்தான் பெரிய இழப்பாக பார்க்கப்படுமே தவிர, அதிமுகவுக்கு அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட போவது கிடையாது. 2 தொகுதிகளிலும் திமுக கூட்டணி ஒருவேளை ஜெயித்தால் கூட, அது ஏற்கனவே அவர்களிடம் இருந்த தொகுதிதானே, இது பெரிய விஷயமா என கூட அதிமுகவால் கூறிவிட்டு கடந்து சென்றுவிட முடியும்.
8 வருட தொடர் ஆட்சி
தமிழகத்தில், அதிமுக ஆட்சி, தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆட்சியாளர்கள் மீது தமிழக வாக்காளர்கள் அதிருப்தி அடைவது வழக்கம். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போடுவதுதான் தமிழக மக்களின் வழமை. எனவே, இரண்டில் ஒரு தொகுதியில், திமுக தோற்றாலும் கூட, 8 வருடமாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும், ஜெயலலிதா போன்ற ஆளுமை மறைவுக்குப் பிறகும் கூட, அதிமுக எழுந்து நிற்க முடியும் என்ற ஒரு மெசேஜ் மக்கள் மத்தியில் சென்று விடும். இது, 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திமுகவுக்கு பின்னடைவாக வாய்ப்பு உள்ளது.
வேலூரில் சறுக்கல்
சமீபத்தில் முடிவடைந்த லோக்சபா பொதுத்தேர்தலின் போது, தேனி தொகுதியைத் தவிர, மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியினர் வெற்றிபெற்றனர். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி வாகை சூடி இருந்தனர். ஆனால், பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டு, பின்னர் நடத்தப்பட்ட வேலூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை விடவும், வெறும் 8141 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது.
தீவிர பிரச்சாரம்
லோக்சபா தேர்தலின் போது, மக்களுக்கு மிட்டாய் கொடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் ஏமாற்றி வாக்குகளைப் பெற்று விட்டார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த பிரச்சாரத்திற்கு பலன் கிடைக்கத் தொடங்கி உள்ளது போல வேலூர் தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன. இதே மாதிரியான பிரச்சாரத்தை நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களிலும் முதல்வர் மேற்கொண்டார்.
மக்களுக்கு செல்லும் மெசேஜ்
ஒருவேளை, இந்த இரு சட்டசபைத் தொகுதிகளில் ஒன்றை திமுக கூட்டணி இழந்தாலும்கூட, ஸ்டாலின் பொய் வாக்குறுதிகள் கொடுத்து தான் லோக்சபா தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தார் என்ற, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்ற ஒரு மெசேஜ் அனைத்து மக்களுக்குமே சென்று சேரும். இதுவும்கூட 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தலின்போது அதிமுகவுக்கு சாதகமாக செல்லக்கூடும். திமுகவின் மீது சில மாதங்களிலேயே மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கி விட்டனர் என்ற ஒரு பிரச்சாரத்தை அதிமுக தலைமை எளிதாக மக்களிடம் எடுத்துச் செல்லும்.
சட்டசபை தேர்தல்
திமுகவைப் பொறுத்த அளவில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை விடவும், வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலைத்தான் பெரிதாக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது. ஆட்சி மாற்றத்தை எப்படியாவது ஏற்படுத்தி விட வேண்டும் என்று திமுக எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. எனது பொதுத் தேர்தலை நோக்கி தான் அவர்கள் நகர்வுகள் சென்று கொண்டு இருக்கின்றன. எனவேதான், இந்த இரு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில், திமுக தோற்றாலும், அவர்களின் இறுதி இலக்கில் தளர்வு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், திமுகவுக்கு இந்த இடைத் தேர்தல்கள் அக்னி பரிட்சை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.