எல்லாம் ஓவர்... நாமதான் ஜெயிக்கிறோம்... ஆளும் கட்சி நம்பிக்கை
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வைட்டமின் 'ப' களமிறக்கப்பட்டு விட்டதால் நாம்தான் ஜெயிப்போம் என்று நம்பிக்கையில் இருக்கிறதாம் ஆளுங்கட்சித் தரப்பு.
சென்னை: ஆளுங்கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டு விட்டதாம். மூன்று தொகுதிகளிலும் 90 சதவிகிதம் வாக்காளர்களுக்கு 'வைட்டமின் கொடுக்கப்பட்டு விட்டதாம். அதனால் அதிமுக-வைப் பொருத்தவரை எல்லாம் சரியாக முடிந்துவிட்டது. மூன்று தொகுதியிலும் நாம ஜெயிச்சிடலாம். அதிக ஓட்டு வித்தியாசத்துல நாம ஜெயிக்கிறோம் என்று உற்சாமாக பேசியிருக்கிறாராம் ஓபிஎஸ்.
திமுகவில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் மட்டுமே போடப்பட்டுள்ளதாம். மூன்று தொகுதிகளிலும் வாக்களர்களுக்கு பணம் கொடுத்து முடித்துவிட்டார்களாம். தஞ்சாவூர் வேட்பாளர் அஞ்சுகம் எங்க அம்மா பேருப்பா... எப்படியாவது ஜெயிக்க வைக்கணும் என்று திமுக தலைவர் கூறியிருப்பதால் பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை பிரச்சாரம் செய்துள்ளார் பொருளாளர் ஸ்டாலின்.
நாமதான் ஜெயிப்போம் என்று அரவக்குறிச்சியில் ஏ.வ.வேலு நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறாராம். அதைக் கேட்டு கட்சிக்காரர்களே நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம். திருப்பரங்குன்றனத்தில் திமுகவின் டாக்டர் சரவணன் தாறுமாறாக செலவு செய்திருக்கிறாராம். இடைத்தேர்தலில் இலை மலருமா சூரியன் உதிக்குமா? மக்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்களோ.
புதுச்சேரியில் நாராயணசாமிக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை. அவரும் முட்டி மோதியிருக்கிறார். நாராயணசாமியை தோற்கடிக்க வீடு வீடாக போய் பிரச்சாரம் செய்திருக்கிறார் ரங்கசாமி. எந்த சாமி சொன்னதை மக்கள் கேட்கப்போகிறார்களோ? சக்தியா? சாமியா? மக்கள் கையில் இருக்கிறது.