ஏற்காடு இடைத்தேர்தல் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டும்: ஸ்டாலின்
ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் மரணமடைந்ததை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக வெ.மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் வலசையூரில் உள்ள பெரியசாமி உடையார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாவட்ட எல்லையான தலைவாசலில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசுகையில், ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக வெ.மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
இங்கு பொதுக்கூட்டம் போல் திரண்டிருக்கும் கட்சியினரை பார்த்து, ஆளும் கட்சியினர் மிரண்டு போவார்கள். ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் இளைஞரும், பட்டதாரியுமான மாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் குறித்து உங்களுக்கு ஆலோசனைக் கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை. உங்களிடமிருந்து தேர்தல் யுக்திகளை அறிந்துக் கொள்ளவே நான் வந்துள்ளேன். இடைத்தேர்தலில் போட்டியிட்டே தீர வேண்டும் என்று சேலம் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியதை அடுத்தே கட்சித் தலைவர் கருணாநிதி வேட்பாளரை அறிவித்துள்ளார்.
எனவே, அனைவரும் சிறப்பான முறையில் பணியாற்றி வெற்றியைத் தேடித் தரவேண்டும். இந்தத் தேர்தலில் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி ஆளுங்கட்சியைத் தவிர்த்து மற்றக் கட்சிகளுக்கு மதிப்பளித்து கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்காக அல்ல. இப்போது நடைபெறும் ஆட்சிக்கு பாடம் புகட்டவே போட்டியிடுகிறோம். பாடம் புகட்டுவோம்.
இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இல்லை. ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டவும், திருத்தவும் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. இதை மனதில் வைத்து கட்சியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தலின்போது, ஆளுங்கட்சியினர் போலீஸாரை வைத்து மிரட்டக்கூடும். அதற்காகவே திமுகவில் வழக்குரைஞர் அணி 24 மணி நேரமும் தயாராக உள்ளது. இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்.
ஆட்சியில் இருப்போர் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களை அனைத்து தரப்பு மக்களிடம் எடுத்துகூற வேண்டும்.
இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே வேட்பாளரை முதலில் அறிவித்தது திமுக தான். எனவே வாக்கு எண்ணிக்கையிலும் முதலாவதாக திமுக வேட்பாளர் வர வேண்டும். வெற்றி, தோல்விகளை சமமாக நினைக்கும் கட்சி திமுக ஒன்று தான் என்றார்.