ஓ.பி.எஸ், நிர்மலா பெரியசாமியை பற்றி இப்படி பேசலாமா சி.ஆர்.சரஸ்வதி? அதிமுக அக்கப்போர்
சி.ஆர்.சரஸ்வதியும், குண்டு கல்யாணமும் என்னை மோசமாக திட்டினர் என்று கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி குற்றம்சாட்டினார்.
சென்னை: மோசமான வார்த்தைகளால் தன்னை சி.ஆர்.சரஸ்வதி மற்றும் குண்டு கல்யாணம் திட்டியதாக நிர்மலா பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பங்கேற்று பேசினார். அப்போது பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசிய நிர்மலாவுக்கும், பா.வளர்மதிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சசிகலா தரப்புக்கு எதிராக திரும்பியுள்ள பன்னீர்செல்வம் குறித்து நிர்மலா பெரியசாமி புகழ்ந்து பேசியதால் சசிகலா ஆதரவாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
நிர்மலா பெரியசாமி பேட்டி
கூட்டத்திலிருந்து, வெளிநடப்பு செய்த நிர்மலா பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கட்சி ஒற்றுமைக்காக ஒரு கருத்தை சொன்னேன். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் நமக்கு என்ன விரோதியா? எதிரியா? அவர்களும் நம் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என்றேன்.
சின்னம் முக்கியம்
இரட்டை இலை சின்னம் பறிபோய் விடக்கூடாது என்ற கலக்கத்தில் நான் இந்த கருத்தை கூறினேன். அதற்கு கூட்டத்தில் இருந்த சி.ஆர்.சரஸ்வதியும், குண்டு கல்யாணமும் என்னை மோசமாக திட்டினர். சி.ஆர்.சரஸ்வதி, என்னை கட்சியை விட்டு விலக சொன்னார். அப்போது வளர்மதியும் என்னை திட்டினார்.
கட்சியில் தொடருவேன்
அவர்கள் பேசும் அளவுக்கு, நான் இறங்கி பேச நினைக்கவில்லை. எனவே உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இது சிறிய பிரச்சினை தான். ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், சின்னமும் எங்கு இருக்குமோ? அங்கு தான் நானும் இருப்பேன். இதுகுறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டால் நிச்சயம் பதில் அளிப்பேன் என்றார்.
ஒருமையில் திட்டினார்
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, "ஓ.பன்னீர்செல்வமும் நல்லவர்தான். அவருடன் நம்முடைய தலைமை மீண்டும் பேசினால் பிரச்னை சரியாகும். நாம் ஏன் அவரைத் திட்ட வேண்டும்" என்று நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஒருமையில் சி.ஆர்.சரஸ்வதி பேசியுள்ளார். அப்படி எல்லாம் பேசக்கூடாது என்று நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது என்ற ஒரு தகவலையும் தெரிவிக்கிறார்கள்.
கூச்சல், குழப்பம்
சி.ஆர்.சரஸ்வதிக்கு ஆதரவாக மேலும் சிலரும் சேர்ந்து கொண்டு நிர்மலா பெரியசாமியிடம் தகராறு செய்துள்ளனர். இதனால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரே சத்தம், கூச்சல் குழப்பமாக இருந்துள்ளது. வெளியில் இருந்தவர்கள், பக்கத்து அறைகளில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து மோதலில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் கோபமடைந்ததால்தான் நிர்மலா பெரியசாமி, கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், புறக்கணித்துச் சென்றுள்ளார்.