பொய் சொல்வதுதான் எடப்பாடி அரசின் கடமையாக இருக்கு... சி.ஆர்.சரஸ்வதி 'பொளேர்': வீடியோ
பொய் சொல்வதுதான் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கடமையாக உள்ளது என சி.ஆர்.சரஸ்வதி விமர்சித்துள்ளார்.
விழுப்புரம்: பொய் சொல்வதுதான் எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஒரே கடமையாக உள்ளது என அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி சாடியுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளரும் தினகரன் ஆதரவாளருமான சி.ஆர் சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,'' ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கட்டாயம் தேவை. அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். தற்போது நாங்கள் சொன்னது பொய் என்று எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் உள்ளவர்கள் கூறி வருகிறார்கள்.
சிபிஐ விசாரணை செய்தால் தான் யார் உண்மை கூறினார்கள், யார் பொய் சொன்னார்கள் என்பது தெரிய வரும். இதைத்தான் சசிகலாவும் தினகரனும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் பொய் சொன்னோம் என்று சொல்கிறவர்கள் தான் நீட் விஷயத்திலும் பொய் சொன்னார்கள். அதனால் தான் அரியலூர் அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்த அரசுக்கு பொய் சொல்வதுதான் கடமையாக இருக்கிறது'' என கூறினார்.