‘அம்மாவுக்கே வாழைப்பழ சின்னம்தான் ஒதுக்கப்பட்டது’… சி.ஆர். சரஸ்வதி ஆவேசம்
அம்மாவுக்கே வாழைப்பழ சின்னம்தான் ஒதுக்கப்பட்டது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கே நிரந்தரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ளது வேதனை அளிக்கிறது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி என்றும் சசிகலா அணி என்றும் இரண்டாக உடைந்தது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரண்டு அணிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தை அணுகின. ஆனால், தேர்தல் ஆணையம் அதிமுக பெயர் மற்றும் இரட்டை சின்னம் ஆகிய இரண்டையும் முடக்கியுள்ளது. இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியதாவது:
வாழைப்பழ சின்னம்
ஜெயலலிதாவிற்கே வாழைப்பழ சின்னம்தான் முதலில் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆ.கே. நகர் மக்கள் மிகப் பெரிய வெற்றியை அதிமுகவிற்கு கொடுப்பார்கள். இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சொந்தம். நிரந்தரமாக அது எங்களிடம்தான் இருக்கும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஜெ.வின் தொகுதி
எங்களுக்கு இது ஒரு சோதனையான காலகட்டம். ஆர்.கே. நகர் மக்கள் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி அடையச் செய்வார்கள். ஏனென்றால் அது ஜெயலலிதாவின் தொகுதி.
அதிமுகவுக்கு ஒரு நீதியா..
அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையத்தின் முடிவை பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது. அகிலேஷ் யாதவும், முலாயம் சிங் யாதவும் தேர்தல் ஆணையத்திடம் பிரச்சனை என்று சென்ற போது தேர்தல் ஆணையம் கேட்டதே மெஜாரிட்டியாக எத்தனை எம்பி, எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவாக உள்ளார்கள் என்றுதான். அகிலேஷ் யாதவ் மெஜாரிட்டி ஆதரவை சொன்ன போது உடனடியாக சைக்கிள் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆணையத்தின் அநியாயம்
ஆனால், 95 சதவீத மெஜாரிட்டி எங்களுக்கு இருக்கிறது. 122 எம்எல்ஏக்களின் ஆதரவை நாங்கள் கொடுத்திருக்கிறோம். 37 எம்பிக்களின் ஆதரவைக் கொடுத்திருக்கிறோம். பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களில் 95 சதவீதத்திற்கு மேல் ஆதரவு இருக்கும் போது, சின்னத்தை மட்டுமல்ல அதிமுக பெயரையே பயன்படுத்தக் கூடாது, கொடியை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அநியாயமானது.
காலம் மாறும்
தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியுள்ளது சரி. கட்சியின் பெயரை ஏன் முடக்க வேண்டும். முலாயம் சிங்கிற்கு ஒரு தீர்ப்பும், அதிமுகவிற்கு ஒரு தீர்ப்பும் எப்படி பொருந்தும். இரு அணியினரும் கொடுத்துள்ள ஆதரவு பட்டியல் சமமாக இருந்தால் ஆணையத்தின் முடிவை சரி என்று சொல்லலாம். ஆனால் பெருமளவில் எங்களுக்குத்தான் ஆதரவு இருக்கிறது எனும் போது ஆணையத்தின் முடிவு வேதனை அளிக்கிறது என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.