தமிழிசை அக்காவே மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள்... சி.ஆர். சரஸ்வதி பதிலடி!
சென்னை : தமிழிசை அக்காவே தயவு செய்து மக்களே கொச்சைப்படுத்தாதீர்கள், தொப்பி சின்னம் கொடுக்காவிட்டால் தோற்றுவிடுவோம் என்று நினைத்தார்கள், ஆனால் தினகரன் என்ற மனிதன் மக்கள் மனதில் இருக்கிறார் என்பது தேர்தல் முடிவின் மூலம் தெரியவந்துள்ளது என்று சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து டிடிவி. தினகரன் அணியின் சி.ஆர். சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : எங்களுடைய வேட்பாளர், சட்டமன்ற உறுப்பினர், தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் டிடிவி. தினகரனுக்கு வாக்களித்த மக்களுக்கு பாதம் தொட்டு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். எந்த பணபலம், படைபலத்துடனும் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.
எங்களுக்கு அதிகாரம் கிடையாது, நாங்கள் கேட்ட சின்னமும் இல்லை. சுயேச்சை வேட்பாளராக மக்களை மட்டுமே நம்பி நின்றார், மத்திய மாநில அரசுகள் தினகரனுக்கு எதிராக கைகோர்த்து நின்றனர்.
மக்கள் சரியான தீர்ப்பு
மக்கள் கூட்டணியுடன் தினகரன் போட்டியிட்டார், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை தெரிவிக்கும் விதமாக முடிவுகள் வந்துள்ளன. நிச்சயமாக கட்சியை வழிநடத்தக் கூடியவராக, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவரான தினகரன் தான் சரியானவர் என்று நம்பிக்கை தரும் வகையில் ஆர்கே நகர் மக்கள் வாக்களித்துள்ளனர்.
தினகரனால் தான் ஜெ. ஆட்சி தர முடியும்
இனி எங்கள் பணி மக்களுக்காகத் தொடரும், இந்த ஆட்சி நிச்சயம் ஜெயலலிதாவின் விருப்பம் பெற்ற ஆட்சியாக மாறும். பாலகங்கா வீட்டில் கொடுக்கப்பட்ட பணம் யாருடையது? தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சியல்ல, ஜெயலலிதாவின் ஆட்சி தான் வேண்டும் அதை தினகரனால் தான் கொடுக்க முடியும் என்று தான் ஆர்கே நகர் மக்கள் இத்தகைய முடிவை தந்துள்ளனர். திமுக 10 கட்சி கூட்டணியுடன் போட்டியிட்டது, அவர்கள் எப்படி ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு விட்டுக் கொடுப்பார்கள்.
மக்கள் சக்தி தான் முக்கியம்
வரலாறு எல்லோருக்கும் தெரியும், ஓ.பன்னீர்செல்வத்தை சென்னைக்கே அழைத்து வந்தது தினகரன் தான். கார்டனில் போய் காலில் விழுந்த போது ஜெயக்குமார் மற்றும் அமைச்சர்களுக்குத் தெரியவில்லையா. மக்கள் சக்தி தான் முக்கியமானது என்பதை ஆர்கே நகர் மக்கள் நிரூபித்துள்ளனர்.
மக்கள் மனதில் தினகரன்
பாஜகவிற்கு நோட்டாவை விட கம்மியான வாக்கு விழுந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். தமிழிசை அக்காவே தயவு செய்து மக்களே கொச்சைப்படுத்தாதீர்கள், தொப்பி சின்னம் கொடுக்காவிட்டால் தோற்றுவிடுவோம் என்று நினைத்தார்கள், ஆனால் தினகரன் என்ற மனிதன் மக்கள் மனதில் இருக்கிறார் என்பது தேர்தல் முடிவின் மூலம் தெரியவந்துள்ளது என்று சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.