ஆவேச வசனம் தேவையில்லை, ராஜினாமாவோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாம் - சி.ஆர். சரஸ்வதி
நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாம் என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாமே என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசியது குறித்து டிடிவி.தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியதாவது : ஆவேசமான வசனம் பேசுவதைவிட, ராஜினாமா செய்யலாம். அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமே.
மத்திய அரசோடு கைகோர்த்துக் கொண்டு நாடகம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்வதெல்லாம் மத்திய அரசுடன் இணைந்து கொண்டு நடத்தும் நாடகமே தவிர வேறு எதுவும் இல்லை.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று சந்திரபாபு நாயுடு நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார். அதைப் போலவே தமிழக முதல்வரும் துணை முதல்வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமே.
நாளைக்குள் கெடு முடியும் நேரத்தில் உணர்ச்சிவசமாக பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுத்ததற்கு நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள், மக்கள் பிரச்னைக்காக நீதிமன்றத்திடம் முறையிடலாமே.
ஜெயலலிதாவை விட ஓபிஎஸ், ஈபிஎஸ் எந்த சட்டநடவடிக்கையும் எடுத்துவிடவில்லை. நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஏன் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள் என்றும் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.