சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்-ஜெயக்குமாரிடம் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழு வலியுறுத்தல்
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபையில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினர் இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் நேரில் வலியுறுத்தினர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வெள்ளிக்கிழமை இரவு போலீசார் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இந்த கொடூர தாக்குதலைக் கண்டித்து 3-வது நாளாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் போலீசாரின் கடும் நெருக்கடிகளுக்கு இடையே இன்றும் 3-வது நாளாக போராட்டம் தொடருகிறது.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டையை உள்ளடக்கிய ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமாரை போராட்டக் குழுவினர் 25 பேர் இன்று சந்தித்து பேசினர். அப்போது தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமாரிடம் போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழுவினர், முதல்வருடன் பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். என்.பி.ஆர்- இல் சர்ச்சைக்குரிய 6 கேள்விகளை நீக்குவதற்காக முதல்வருடன் பேசி அறிக்கை வெளியிடுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்திருக்கிறார் என்றனர்.