அத்தனை அமைச்சர்களுக்கும் மீண்டும் பதவி
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அரசில், ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அத்தனை பேருக்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அதிமுக அரசு இன்று பதவியேற்கவுள்ளது. 2வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகிறார். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்கிறது.
இந்த அமைச்சரவையில் ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அத்தனை பேருக்கும் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
13 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது, ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 2 பேர் மட்டும் கழற்றி விடப்பட்டனர். மற்றவர்கள் அப்படியே நீடித்தனர். அதேபோல இந்த முறையும் ஒப்புக்கு யாரையாவது கழற்றி விடுவார்களா என்று தெரியவில்லை.
இதுவரை அமைச்சர்கள் யார் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.