அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்: மாதவாடகையை ரூ.150ஆக உயர்த்த கோரிக்கை
மாத வாடகையை 150 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று காலை 9 மணிமுதல் ஒளிபரப்பை நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, திருச்சி நீங்கலாக நடைபெற்றும் வரும் இந்த போராட்டம் காரணமாக தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடியாமல் இல்லத்தரசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. கடந்த மூன்றரை ஆண்டுகளாக முழுமையாக இயங்கி வருகிறது.
அரசு கேபிள் டி.வி.யில் 26 ஆயிரம் ஆபரேட்டர்கள் உள்ளனர். சுமார் 63 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அரசு கேபிள் டி.வி.க்கு ரூ.70 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு நகரங்களில் அதைவிட கூடுதலாகவே மாதம்தோறும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்பது கேபிள்டிவி ஆபரேட்டர்களின் கோரிக்கையாகும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் 70 ரூபாய் என்றாலும் அனைத்து ஊர்களிலும் 100 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் சேவையை நிறுத்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாகாது என அறிவித்துள்ளனர்.
இது குறித்து அரசு கேபிள் டிவி சங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம் கூறியுள்ளதாவது: அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை 70 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும். தரமான ஒளிபரப்பு வழங்க வேண்டும். கேபிள் வயர்களை எடுத்து செல்வதற்கு விதிக்கப்படும் தள வாடகையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
ஆனால் எங்கள் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. நேற்று நடந்த பேச்சு வார்த்தையின் போது கூட உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் இன்று ஒளிபரப்பை நிறுத்தியுள்ளோம் என்றார்.
அரசு கேபிள் டி.வி.யில் தொடர்ந்து இருக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய சங்க உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆலோசனை பெற்று இறுதி முடிவு எடுக்கப் போவதாகவும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.