தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் அதிரடி கைது!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: உச்சநீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் இன்று கோவையில் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார்.
தலைமறைவாக இருந்து கொண்டே தம் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பலமுறை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை செய்தார்.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்தார் நீதிபதி கர்ணன். கடந்த ஒரு மாதமாக கொல்கத்தா போலீசாருக்கு டிமிக்கு கொடுத்து வந்த நீதிபதி கர்ணன் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை போலீசார் மூலம் கொல்கத்தா போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த கொல்கத்தா போலீசார் தமிழக போலீசார் ஒத்துழைப்புடன் கோவை மலுமிச்சம்பட்டியில் பதுங்கி இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். அவரை கொல்கத்தா அழைத்து செல்லப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.