எங்களுக்கும் 'ஸ்மால்' ப்ளீஸ்.. திருப்பூரிலிருந்து கிளம்பும் கோரிக்கைக் குரல்!
திருப்பூர்: கொங்கு மண்டலத்தின் சுறுசுறு நகரான திருப்பூரிலும் தமிழக அரசின் ஸ்மால் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது.
தனியார் மினி பஸ்களின் சேவை சரியில்லை என்பதால் இந்தக் கோரிக்கையை நல்லூர் நுகர்வோர் நல அமைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த அமைப்பு மனு ஒன்றை அனுப்பியுள்ளது.
சின்ன நகரம்.. அழகான நகரம்
கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள திருப்பூர் சின்ன நகராக இருந்தாலும் அழகான நகரம். சுறுசுறுப்பான தொழில் நகரம்.
ஸ்மால் பஸ் தேவை
இப்படிப்பட்ட திருப்பூரில் தற்போது மினி பஸ்கள் நிறையத் தேவை என்ற கோரிக்கை வந்துள்ளது. கூடவே சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மால் பஸ்களையும் அறிமுகப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளது இந்த நுகர்வோர் நலச் சங்கம்.
முழு திருப்தி இல்லை
இதுகுறித்து சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், தற்போது திருப்பூரில் இயக்கப்படும் மினி பஸ்களால் மக்கள் திருப்தியுடன் இல்லை. எனவே சென்னையைப் போலவே இங்கும் ஸ்மால் பஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
உள்ளே வர மறுக்கிறார்கள்
தற்போது இயக்கப்படும் மினி பஸ்கள் சரிவர இயங்குவதில்லை. உட்புறப்பகுதிகளுக்கு அவர்கள் வருவதில்லை.
மெயின் ரோடு வரை வந்து என்ன புண்ணியம்
பல இடங்களில் மெயின் ரோட்டுடன் சர்வீஸை நிறுத்தி விடுகின்றனர். குறுகலான சாலைகளில் வர மறுக்கிறார்கள்.
ஸ்மால் பஸ் வந்தால் நல்லது
எனவே சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைப் போல அரசின் ஸ்மால் பஸ்களை இங்கும் அறிமுகப்படுத்தினால் மக்கள் மகிழ்வார்கள்.
பழைய பஸ்ஸ்டாண்ட்...
திருப்பூர் பழை பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து கே.செட்டிப்பாளையம், திருமுருகன் நகர், பழவஞ்சிபுரம், ராயபுரம், அங்கேரிபாளையம், குமரமப்பபுரம், திருநீலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஸ்மால் பஸ்களை இயக்கலாம் என்றார்.
அம்மாவுக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில் வாக்குகளை அள்ளிக் கொடுத்த கொங்குப் பகுதிகளில் திருப்பூரும் ஒன்று... கோரிக்கையைக் கவனிப்பாரா...