கால் டாக்சி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக் - ஓலா, ஊபருக்கு எதிராக போர்க்கொடி!
ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு எதிராக சென்னை கால்டாக்சி ஓட்டுனர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: கமிஷன் தொகையை பெருமளவு கால்டாக்சி நிறுவனங்களே எடுத்துக்கொள்வதால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இன்று சென்னை கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறு முதலாளிகளின் கைகளிலிருந்த கால்டாக்சி தொழில் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் கைக்கு சென்று விட்டதால் வேறு வழியின்றி கால்டாக்சி ஓட்டுனர்கள் அவர்களிடம் பணிக்கு சேரும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், வாடிக்கையாளர் தரும் பணத்திலிருந்து 27 சதவீதம் கமிஷனாக எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
இதனால் கால்டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாராம் பெருமளவு பாதிக்கப்படுவதாக கூறியும், கடன் சுமை தாங்க முடியாமல் 3 கால்டாக்சி ஓட்டுனர்கள் தற்கொலை செய்துக்கொண்டதற்கு நியாயம் கேட்டும் வகையிலும் சென்னை கால்டாக்சி ஓட்டுனர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் பணம் பறிப்பு, கைக்காசு போட்டு பெட்ரோல் போடுவது என பலவகையில் நஷ்டத்திற்கு ஆளாகும் கால்டாக்சி ஓட்டுனர்களின் வாழ்க்கையை காப்பாற்றும் விதமாக அரசே இதற்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோகளை பயன்படுத்தும் நபர்களை விட கால்டாக்சியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், சுயநலத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடந்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் சட்ட திருத்த மசோதா சாமானியர்களை விட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளதால் அதனையும் தாங்கள் எதிர்ப்பதாக கால்டாக்சி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் தங்கள் போராட்டத்தை தமிழக அளவில் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.