கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா முறைகேடு செய்ததா? விசாரணையில் குதிக்கும் தேர்தல் ஆணையம்
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் இந்திய தேர்தல்களில் முறைகேடு செய்து இருக்கிறதா என்று கண்டுபிடிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் இந்திய தேர்தல்களில் முறைகேடு செய்து இருக்கிறதா என்று கண்டுபிடிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. இந்த மாதம் 27ம் தேதி இதற்காக கூட்டம் நடத்தப்பட உள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்றால் என்ன
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனைகளை வழங்கி, வெற்றி பெற வழிகாட்டி வருகிறது.
அமெரிக்கா
உலகம் முழுக்க பல நாடுகளில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் அவர்களுடைய தேர்தல் முறைகேடு வேலையை காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம்தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல் ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
இந்தியா
அதே சமயத்தில் குஜராத் மாநில தேர்தல், உத்தர பிரதேச தேர்தல், இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஆகிய அனைத்து தேர்தல்களிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. பாஜகவும், காங்கிரஸும் மாற்றி மாற்றி ஒருவர் மீது ஒருவர் இதில் குற்றச்சாட்டு வைத்துக் கொள்கிறார்கள். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் இந்திய கிளை நிறுவனத்துடன் பாஜக தொடர்பில் இருப்பதற்கான ஆதாரமும் வெளியானது.
கூட்டம்
இந்த நிலையில்தான் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் இந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா முறைகேடு குறித்து விசாரிக்க உள்ளது. முதலில் இந்த விஷயத்தில் தெளிவு கிடைப்பதற்காக இந்த மாதம் 27ம் தேதி கூட்டம் நடத்த இருக்கிறது. அதன்பின் கட்சிகளை அழைத்து விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.