குஜராத்தில் நாளை மறுநாள் முதற்கட்ட சட்டசபை தேர்தல்.. இறுதிக் கட்ட பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.
அகமதாபாத் : குஜராத் மாநில சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடக்க இருப்பதால், இன்றோடு அங்கு பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ளது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி மற்றும் 14ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடந்து வந்தது.
22 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.,விற்கும், ராகுல் தலைமையில் விறுவிறுப்பாக பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸுக்கும் இந்த முறை குஜராத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள்முதற்கட்ட வாக்கப்பதிவு நடக்க இருக்கிறது. மொத்தம் இருக்கும் 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 57 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 977 வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர். சுரேந்திர்நகர், ராஜ்கோட்,ஜூனாகத், அம்ரேலி, மொர்பி ஆகிய முக்கியத் தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இன அடிப்படையிலான வாக்குகள் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்து இருக்கிறார்கள். பா.ஜ.க.,வை தொடர்ந்து எதிர்த்து வந்த பட்டேல் இன மக்களின் வாக்குகளை ஹர்திக் பட்டேலின் ஆதரவு மூலமும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு வாக்குகளை அல்பேஷ் தாகூரின் ஆதரவு மூலமும் காங்கிரஸ் பெருமளவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி 14 பேரணி பொதுக்கூட்டங்களிலும், ராகுல் காந்தி பல்வேறு பிரச்சாரக்கூட்டங்களிலும் கலந்துகொண்டதால், கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருந்தது. இந்நிலையில், சில நாட்களாக ஓகி புயல் பாதிப்பால் சில பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், கடைசி நாளான இன்று பிரச்சாரம் முற்றிலுமாக ஓய்ந்துள்ளது.