"கிங் மேக்கர்" ஆவாரா மு.க.ஸ்டாலின்.. சாதுரியமாக செயல்பட்டால் கை கூடும்!
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் கூட்டணியை எப்படி அமைக்கப் போகிறார், வெற்றியை எந்த அளவுக்குப் பெறப் போகிறார், எத்தகைய முடிவுகளை அவர் எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்து அது உள்ளது.
மிக மிக வலிமையான ஒரு தலைவராக திகழ்ந்தவர் மறைந்த தலைவர் கருணாநிதி. எத்தனையோ அரசியல் புயல்களை அனாயசமாக கடந்து சென்றவர் கருணாநிதி. அவர் அளவுக்கு எதிர்ப்புகளையும், தோல்விகளையும் சந்தித்த தலைவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி வரலாறுகளைப் படைத்தவர் கருணாநிதி. திமுக தலைவராக தற்போது செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் எந்த அளவுக்கு இந்த பாரம்பரியத்தை தொடரப் போகிறார் என்பது போகப் போகத்தான் தெரியும்.
அரசியல் ரீதியாக ஸ்டாலினி்ன் சாதுரியம் வருகிற லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளது. இந்த இரு தேர்தல்களும் ஸ்டாலினின் அரசியல் பயணம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்பதை உரசிப் பார்க்கும் வகையில் அமையும்.
[ஏபிபி சொல்வதில் உண்மை இருக்கு.. ஆந்திராவில் பாஜக அடி வாங்கும்.. நாயுடு ஒருவரே போதும்! ]
ஏபிபி கருத்துக் கணிப்பு
ஏபிபி டிவி நேற்று வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் தென் மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு 3வது இடமே கிடைக்கும் என்று கூறியிருப்பது முக்கியமானது. முதல் இடத்தில் மாநிலக் கட்சிகள் வருகின்றன. அதாவது திமுக, தெலுங்கு தேசம், டிஆர்எஸ் உள்ளிட்டவை. இதில் அதிமுகவுக்கு என்ன பங்கு இருக்கும் என்பதை கணிக்கக் கூட முடியவில்லை. காரணம், அதிமுகவின் நிலைமை அப்படி உள்ளது.
திமுகவின் பங்கு
இந்த 76 இடங்களில் தமிழகத்தின் பங்கு எத்தனை என்பதை ஏபிபி வெளிப்படுத்தவில்லை. தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒரு தொகுதி உள்ளது. இந்த இரண்டையும் சேர்த்தால் 40. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளை அதிமுக அள்ளிச் சென்றது. தற்போது அந்த வாய்ப்பை திமுக ஏற்படுத்துமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பெரிய வெற்றி பெற்றால்
ஜெயலலிதா இல்லை, பெரிய அளவில் அரசியல் தலைவர்களும் இல்லை. இந்த நிலையில் கட்டுக்கோப்பான தொண்டர் படை, அருமையான நிர்வாக கட்டமைப்பு, பொருளாதார ரீதியில் வலுவான கட்சி என்று பல்வேறு சாதகங்களுடன் இருக்கும் திமுக புத்திசாலித்தனமாகவும், சாதுரியமாகவும், கவனமாகவும் செயல்பட்டால் மிகப் பெரிய வெற்றியை எளிதாக பெற முடியும். அதைத்தான் தற்போது ஸ்டாலின் செய்ய வேண்டியுள்ளது.
வலுவான கூட்டணி தேவை
வலுவான கூட்டணியை திமுக அமைத்தால்தான் வெற்றி கை கூடும். சின்னத் துறும்பு கூட பல் குத்த உதவும் என்பார்கள். அதுபோல சின்ன சின்ன சக்திகளைக் கூட தன் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் உள்ளார். அதுதான் திமுகவுக்கு தற்போதைய முக்கியத் தேவை. ஈகோவை ஓரம் கட்டி வைத்து விட்டு தமிழகத்தில் திமுக ஒரு வலிமையான சக்தி என்பதை மாநில அளவிலும், தேசிய அளவிலும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் திமுகவுக்கு உள்ளது.
மிதப்பாக இருந்தால் அம்புட்டுதான்
யாரும்தான் இல்லையே. நாம் மட்டும்தானே. மக்களுக்கு வேறு சாய்ஸ் இல்லையே.. ஈஸியாக ஜெயித்து விடலாம் என்ற மிதப்பு மட்டும் வந்து விடக் கூடாது. அது அபாயகரமானது. மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் திமுக கவனமாக செயல்பட்டாக வேண்டும். மக்கள் பிரச்சினைகளில் அது இன்னும் பட்டும் படாமலும்தான் போய்க் கொண்டிருக்கிறது. அது தவறு என்பதை முதலில் தலைமை உணர வேண்டும். மக்களோடு மக்களாக தீவிரமாக அது இறங்க வேண்டும். அப்படி செயல்பட்டால்தான் மொத்தமாக மக்கள் ஆதரவை திமுகவால் பெற முடியும்.
கிங் மேக்கர் ஆகும் வாய்ப்பு
திமுகவால் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற முடிந்தால் அது நிச்சயம் கிங் மேக்கராகும் வாய்ப்புள்ளது. அதாவது மத்தியில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாமல் போனால், திமுகவின் முக்கியத்துவம் கூடும். ஒரு வேளை பாஜகவுக்கு திமுகவின் தயவு தேவைப்படும் சூழல் ஏற்பட்டாலும் கூட திமுகவின் கை ஓங்க வாய்ப்பு ஏற்படும். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடக்கும் என்பதையே ஏபிபி போல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இணைந்து எதிர்க்கலாம்
ஏபிபி போலில் வந்துள்ள முடிவுகளைப் போல தென் மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகள் பெரும் வெற்றியைப் பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றினால் அவர்களை ஒருங்கிணைத்து அகில இந்திய அளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவும் திமுக முயலலாம். அதாவது சந்திரபாபு இடத்தைப் பிடிக்க ஸ்டாலின் முயற்சிக்க முடியும். இப்படி பல சாதகங்கள் உள்ளன.. ஆனால் ஸ்டாலின் செயல்படப் போகும் விதத்தைப் பொறுத்து இவையெல்லாம் கை கூடும்.