தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது... அது சாதாரண விஷயமல்ல: வைகோ!
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஆட்சியை கலைப்பது என்பது சாதாரண விஷயமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி: ஜல்லிக்கட்டு தடை வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது என கூறியுள்ள வைகோ அது சாதாரண விஷயமல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விலங்குகள் நல வாரியத்தில் உள்ள பல உறுப்பினர்கள் கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கிறார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில் திராவிடர் இளைஞர் விழிப்புணர்வு பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "திராவிட கொள்கைகளை இளைஞர்களிடையே பரப்ப இந்த பாசறை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாசறையின் நோக்கம் ஒரு லட்சம் தமிழ் இளைஞர்களை திராவிட பற்றுள்ளவர்களை வார்ப்பிப்பதுதான்.
மது, ஊழல், மாசில்லா தமிழகம்
இதேபோன்ற பாசறைகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். மது இல்லா தமிழகம், ஊழலில்லா தமிழகம், மாசில்லா தமிழகம் ஆகிய மூன்று பிரதான கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. சீமைக்கருவேல மரங்களை அகற்ற பாடுபட்டு வருகிறேன்.
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
குடி மராமத்து திட்டம் வரவேற்க கூடிய ஒன்று. அதனை வரவேற்கிறேன். நூறு நாள் வேலைத் திட்டத்தில் கருவேல மரத்தை நீக்க வேண்டும்.
கோவை மாவட்டத்துக்கு தண்ணீர் இருக்கு
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் கோவை மாவட்டத்துக்கு தண்ணீர் இருக்காது. 2016 ல் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டினால் கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் இருக்காது என நாங்கள் போராடியதால் அப்போது கிடப்பில் போடப்பட்டது.
பிரதமரிடம் பேசினேன்
ஒருமைப்பாட்டை பாதுகாக்க மத்திய அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமருடனான எனது சந்திப்பின் போது ஜல்லிக்கட்டை பொறுத்தவரை ஏறு தழுவுதல் என பிரதமரிடம் பேசினேன்.
திமுக, காங்கிரஸ்தான் காரணம்
ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு காரணம் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான். காட்டு விலங்குகளை பட்டியலில் சேர்த்ததே ஜல்லிக்கட்டு தடைக்கான காரணம்.
திமுக அமைச்சர்கள் வாய்திறக்கவில்லை
2009ல் கருணாநிதி சட்டம் கொண்டு வந்த போது ஜனாதிபதி, மத்திய உள்துறை அனுமதி பெற முயற்சி எடுக்க வில்லை. காளைகளை காட்சிப்படுத்தக்கூடாது பட்டியலில் சேர்க்கும் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதனை தடுக்கவில்லை.
கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கிறார்கள்
விலங்குகள் நல வாரியத்தில் உள்ள பல உறுப்பினர்கள் கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கிறார்கள். அபிசேக் சிங்வியை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி விட்டீர்களா? இல்லை. இதுவரை அவர் கட்சியில்தான் உள்ளார்.
அபிஷேக் சிங்வி முடிவு தவறானது
காங்கிரிஸ் கட்சியில் இருந்துக் கொண்டே அவர் மனுத்தாக்கல் செய்வது தவறான முடிவு. போராடுவது மாணவர்களின் அடிப்படை உரிமை. கவர்னர், ஆளுநர் உரையில் யார் எந்த அமைப்பு வன்முறைக்கு காரணமாக இருந்தவர்கள்எஎன விளக்கம் வேண்டும்.
காவல்துறையினரை கைது செய்ய வேண்டும்
காவல்துறை மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? காவல்துறையினர் மீது வழக்கு போட வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். வன்முறைக்கு காரணமான காவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
தமிழக அரசை கலைக்க முடியாது
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு மாணவர்களே காரணம். ஜல்லிக்கட்டு தடை வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சியை கலைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
தடை விதித்தாலும் நடத்தனும்
உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும். காவல்துறை ஜல்லிக்கட்டை தடுக்கக்கூடாது". இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.