ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு அரசியல் சேவையெல்லாம் செய்ய முடியாது.. கமல்ஹாசன் பளிச் பேட்டி
சென்னை: கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடிக்கும் விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அது தொடர்பாக கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதத்துக்கு எதிரான படமா இது? என்ற கேள்விக்கு, "நிச்சயமாக இல்லை. காஷ்மீரில் வாழும் ஒரு ராணுவ வீரரின் கதை. அவன் தேசத்திற்காகவும், மதத்திற்காகவும் எப்படி வேறுபடுகிறான் என்பதை காட்டி உள்ளோம். இந்த படத்தில் அதை குறிக்கும் வகையில் எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தேச துரோகியாக இருப்பது தான் தவறு என்று வசனமே வைத்துள்ளோம்" என்றார்.
அரசியலுக்கு வந்த பிறகும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறீர்களே? என்ற கேள்விக்கு, இது என் தொழில். இதை செய்தால் தான் பிழைப்பு நடத்த முடியும். ஒரு ரூபாய் வாங்கி கொண்டு சேவை செய்கிறேன் என்றெல்லாம் உட்டாலக்கடி செய்ய முடியாது.
இது எனது கடைசி படம் அல்ல. கட்சி பணியில் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை தியாகம் செய்யமாட்டேன். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் பணியை செய்வேன் என்று சொன்னதெல்லாம் பொய்.
அரசியலில் இருக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும். இங்கு யாரும் தியாகங்கள் செய்யவரவில்லை. எம்ஜிஆர் எம்எல்ஏ ஆன பிறகும் படங்களில் நடித்து கொண்டே இருந்தவர்தான். அதேபோல நானும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். எப்போது எம்எல்ஏ என ஒரு பதவி வருகிறதோ அப்போது தேவைபட்டால் நடிப்பதை நிறுத்தி கொள்வேன்.
தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். முதலில் அங்கு உணவு பொருள் கட்டணத்தை குறைக்கட்டும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.