ஜெயலலிதா சமாதிக்கு யாரும் போகக் கூடாது என்று தடை போடுவாங்களோ? சீமான் ஆவேசம்
மெரீனாவில் யாரும் கூடக் கூடாது என்றால் ஜெயலலிதா சமாதிக்கு யாரும் போகக் கூடாது என்று தடை செய்ய தமிழக அரசு தயாரா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
சென்னை: மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு அமைச்சர்கள் யாரும் கூட்டமாக செல்லக் கூடாது என்று அறிவிக்க தமிழக அரசு தயாரா என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்தது.
தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அராஜகம், மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்களை மானப்பங்கப்படுத்தி, நிர்வாணப்படுத்தி கொன்றனர்.
நினைவு தினம்
தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17-ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அஞ்சலி செலுத்த மே 17 இயக்கம் அழைப்பு விடுத்தது.
7 ஆண்டுகளாக அஞ்சலி
கடந்த 7 ஆண்டுகளாக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மெரீனாவில் கூடுவதற்கு போலீஸார் தடைவிதித்தனர். அதையும் மீறி மே 17 இயக்கத்தினர் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கைது நடவடிக்கை
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரை கைது செய்த போலீஸார் அவர்களை 14-ஆவது குற்றவியல் நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தினர். 17 பேரையும் வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் மே 23-ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கைது நடவடிக்கை தேவையற்றது
இந்த கைது நடவடிக்கை குறித்து சென்னை விமான நிலையத்தில் சீமான் தெரிவிக்கையில், கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு தடைவிதித்தது ஏன்? இனப்படுகொலையில் இறந்தவர்களும் மக்கள்தானே.
தியானம் செய்தால் மட்டும்....
மெரீனாவுக்கு கூட்டமாக போகக் கூடாது என்றால் ஜெயலலிதா சமாதியில் மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்வதால் மட்டும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்காதா? அப்ப மெரீனாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிக்கு யாரும் கூட்டமாக போகக் கூடாது என்று தடை போட தமிழக அரசு தயாரா? தமிழர்களின் உரிமை, அடையாளம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார் அவர்.