கல்விக்கடனை ரத்து செய்ய தமாகா ஆர்ப்பாட்டம்.. அரசின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? ஜிகே வாசன்
சென்னை: மத்திய பா.ஜ.க-வும், அ.தி.மு.க.வும் தேர்தல் நேரத்தில் கல்விக் கடன் ரத்து உள்பட பல்வேறு வாக்குறுதிகளை மாணவர்களுக்கு வழங்கியது. ஆனால், 2 அரசுகளும் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டன என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் விமர்சித்துள்ளார்.
மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரியும், தனியார்கள் மூலம் மாணவர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்யப்படுவதை நிறுத்தக் கோரியும் த.மா.கா. மாணவர் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாணவரணி தலைவர் சுனில்ராஜா தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: கல்வி வளர்ச்சி தான் தேசத்தின் அடையாளம் என்பதால், நாட்டின் வாழ்வும் வளமும் மாணவர்கள் கையில் தான் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படுவதோடு, பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி வழங்க வேண்டும்.
தனியார் கல்லூரிகளில் நடைபெறும் கட்டண கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது மத்திய, மாநில அரசுகள் எற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மாணவர்கள் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை வசூல் செய்ய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கல்விக் கடனை வராக் கடனாக அறிவித்து மாணவர்களின் பெயரை சிபில் பட்டியலில் சேர்ப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் 9,56,000 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.16,380 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி கடன் தெகையை வசூல் செய்வதற்கு தனியார் நிறுவனங்களை நியமித்துள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும்.
பா.ஜ.க-வும், அ.தி.மு.க.வும் தேர்தல் நேரத்தில் கல்விக் கடன் ரத்து உள்பட பல்வேறு வாக்குறுதிகளை மாணவர்களுக்கு வழங்கியது. 2 அரசுகளும் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டன என்று அவர் கூறினார்.