நடிகர் சங்க கட்டடம்... சத்யம் சினிமா ஒப்பந்தம் ரத்தாகலையாமே!
சென்னை: நடிகர் சங்கக் கட்டடம் கட்ட எஸ்பிஐ சினிமாவுடன் (சத்யம்) போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக நடிகர் சரத்குமார் அறிவித்தாலும், அது உண்மையில்லை. இன்னும் ஒப்பந்தம் எஸ்பிஐ சினிமா வசமே உள்ளதாக பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், எஸ்பிஐ சினிமாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை, செப்டம்பர் 29-ம் தேதியே ரத்து செய்துவிட்டோம் என்று சரத்குமார் கூறினார். அதற்கான ஆவணங்களையும் காட்டினார். எஸ்பிஐ சினிமா லெட்டர்பேடில் இந்த ஒப்பந்த ரத்து விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஒப்பந்த ரத்து பதிவு செய்யப்படவில்லை என பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நவம்பர் 26, 2010-ல் நடிகர் சங்க அறக்கட்டளையும் சத்யம் சினிமாஸும் (எஸ்பிஐ) ஒப்பந்தம் செய்து, அதை முறையாகப் பதிவு செய்தனர். இப்போது தி நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்தப் பத்திரம் உள்ளது.
இதனை ரத்து செய்ய வேண்டுமானாலும், அதற்கான ரத்து ஆவணம் தயார் செய்து அதனை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. எனவே இந்த நிமிடம் வரை அப்படி எந்த ஆவணமும் பதிவு செய்யப்படவில்லை. எனவே நடிகர் சங்க நிலம் இன்னமும் சத்யம் சினிமா வசம்தான் உள்ளது," என்றனர்.