தட்கல் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: தட்கல் கட்டண உயர்வால் சாதாரண மக்கள் நேரடியாக பாதிப்படைகின்றனர். எனவே தட்கல் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சேவைத் துறையான ரயில்வே துறையை லாபம் ஈட்டும் வணிகத்துறையாக மத்திய அரசு மாற்றி வருகிறது. பாஜக அரசு பொறுப்பேற்று முதல் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்பே ரயில் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டது.
நடை மேடை கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.10 ஆகவும், பொது பயணச் சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு சாதாரண 2-ம் வகுப்பு தவிர்த்த மற்ற வகுப்புகளில் முழு கட்டணம் செலுத்தும் புது விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது தட்கல் முன்பதிவு கட்டணம் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் கட்டண உயர்வை, நாடாளுமன்றம் நடக்கும் காலங்களில் இரு அவைகளிலும் அனைத்து உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்பே முறைப்படுத்த வேண்டும். இதை மத்திய அரசு கடைபிடிப்பதில்லை. இது நாடாளுமன்ற நடைமுறை விதிகளுக்கு முரணானது. எனவே மத்திய அரசின் தட்கல் முன்பதிவு கட்டண உயர்வு மற்றும் பிற கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.