ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் 3 நாட்களில் திருப்பி அளிக்கப்படும்: தெற்கு ரயில்வே
சென்னை: ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் 3 நாட்களில் திருப்பி அளிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பை மனதில் வைத்து கடந்த மாதம் மட்டும் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து சென்னை வெள்ளக்காடாகியுள்ள நிலையில் நேற்று 41 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இது தவிர 20க்கும் மேற்பட்ட ரயில் சேவை பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டது. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கியவர்களுக்காக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் பணம் பயணிகளுக்கு 3 நாட்களில் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும். ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் 3 நாட்கள் கழித்து அங்கு சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.