ஏற்காடு திமுக வேட்பாளர் பழங்குடி இனத்தவர்தான்: திமுக விளக்கம்
சேலம்: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவரே என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வெ.மாறன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பழங்குடி இனத்தை சார்ந்தவர் இல்லை என்றும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஒரு அமைப்பினர் தெரிவித்து இருந்தனர்.
இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், தி.மு.க. வேட்பாளர் வெ. மாறன் பழங்குடி இனத்தை சார்ந்தவர்தான். இதற்கு ஆதாரம் உள்ளது. 1976 அரசு ஆணைப்படி மாறன் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். மாறனின் பெரியப்பா சின்னசாமி ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து மக்களுக்கு பணியாற்றி உள்ளார்.
இவரே 1971ல் ஏற்காடு தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து பணியாற்றி உள்ளார். மாறனின் சித்தப்பா திருஞானம் 1984ல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றி உள்ளார். இவற்றை அறியாதவர்கள் வேண்டும் என்றே புரளியை பரப்பி வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து தலைமைக்கு தெரிவித்து மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளோம் என்றார்.