ஸ்மார்ட் போனில் விஜயகாந்த்… கேப்டன் ஆப்ஸ் தொடக்கம்
சென்னை: ஸ்மார்ட்போன்களில் விஜயகாந்த் மற்றும் தேமுதிக குறித்த செய்திகளை உடனுக்குடனே அறிந்துகொள்ள, கட்சியில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள என பல்வேறு வசதிகளுடன் CAPTAIN APPLICATION எனப்படும் புதிய ஆப் வெளியிடப்பட்டது.
சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வரும் தேமுதிகவினர் கட்சித்தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் விழா நடைபெற்றது. அதில் விஜயகாந்த் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது. அதில் சினிமா முதல் அரசியல் வரை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
ஸ்மார்ட் போனில் விஜயகாந்த்
ஸ்மார்ட்போன்களில் விஜயகாந்த் மற்றும் தேமுதிக குறித்த செய்திகளை உடனுக்குடனே அறிந்துகொள்ள, கட்சியில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள என பல்வேறு வசதிகளுடன் APP எனப்படும் CAPTAIN APPLICATION (கேப்டன் மென்பொருள்) வெளியிடப்பட்டது. தமிழக அரசியல் தலைவருக்கென தனியாக இதுபோன்ற மென்பொருள் வெளியிடப்பட்டது இதுவே முதல்முறை.
தபால்தலை வெளியீடு
இந்திய தபால்துறையின் மூலம் தேமுதிகவின் முரசு சின்னமும், ஊட்டி மலை ரயில் எஞ்சின் படமும் பொறித்த ஐந்து ரூபாய் மதிப்புகொண்ட தபால்தலை வெளியிடப்பட்டது. இதுவரையில் எந்த அரசியல் கட்சியும் இதுபோன்று தபால்தலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களுக்கு இழப்பீடு
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் சுமார் 4000 பேர் உறுப்பினராக உள்ளனர். அதில் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக ஆயிரம் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பத்துகோடி இழப்பீடு கிடைக்கும் வகையில் LICல் பாலிசி வழங்கப்பட்டது. இதன்மூலம் பத்திரிக்கையாளர்கள் நன்மையடைவார்கள் என கூறி சங்கத்தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பொதுசெயலாளர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் நன்றி கூறி வாழ்த்து தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் பள்ளிக்கு நிதி உதவி
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வாய்பேசாதோர், காது கேளாதோர் பள்ளிக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் ரூபாய் 50,000 நிதியுதவி வழங்கினார். தன்னுடைய பிறந்தநாளையொட்டி அப்பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது என்று தேமுதிக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.