திமுக கூட்டணி மூழ்கும் கப்பல்.. "கேப்டன்" போக மாட்டார்.. பொன். ராதா
சிவகாசி: திமுக கூட்டணி என்பது மூழ்கும் கப்பல் போன்றது. அதற்கு "கேப்டன்" போக மாட்டார் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
சிவகாசியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கவிருக்கின்றன. எந்தக் கட்சிக்கும் தனியே போட்டியிட விருப்பமில்லை.
அப்படி இருக்கும்போது நாங்கள் மட்டும் எப்படி தனித்துப் போட்டியிட முடியும். எனவே பாரதிய ஜனதா கட்சியும் தமிழக தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடும்.
விஜயகாந்த் நடத்தும் கட்சி மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் இக்கூட்டணி கடலில் மூழ்கும் கப்பலைப் போன்றது. இந்த கப்பலுக்கு கேப்டன் (விஜயகாந்த்) செல்வாரா?.
பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.