கிராமத்தில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி... உயிரோடு பிடிக்க முயற்சி - அமைச்சர் சீனிவாசன் உறுதி
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கிராமத்தில் புகுந்த கரடியை உயிரோடு பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருவதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கிராமப் பகுதியில் சுற்றித் திரியும் கரடியை பிடிப்பது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
கிராமத்தில் புகுந்த கரடி
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தன்குளத்தை அடுத்துள்ள ஆயன்குளம் பகுதியில் உள்ள சோள நாற்று வயலுக்குள் கடந்த சனிக்கிழமை கரடி ஒன்று புகுந்தது. வயல் வேலைக்கு சென்ற விவசாயிகள் கரடியை பார்த்து பீதியுடன் ஊருக்குள் ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊர்மக்கள் திரண்டு கரடியை பிடிக்க முயன்ற போது அது பாய்ந்து அங்கும் இங்குமாக ஓடியது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கரடியை பிடிக்க முயற்சி
இதையடுத்து, பொதுமக்கள் விரட்டியதால் கரடி அந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து தப்பிச் சென்றது. கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, நெல்லையில் இருந்து வனத் துறை அலுவலர் சச்சின், வனவர் பால்ராஜ், விலங்குகளுக்கு மயக்க மருந்து செலுத்தும் மருத்துவர் முத்துகிருஷ்ணன் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட வனத் துறையினர் ஆயர்குளத்திற்கு வந்தனர்.
5 பேரை தாக்கிய கரடி
அங்குள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடியைப் பிடிக்க மயக்க மருந்து செலுத்தினர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கரடி மீது வலையை வீசி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் வலைக்குள் சிக்காத கரடி அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. இதில், ஆ.சாத்தான்குளத்தைச் சேர்ந்தகாளிமுத்து (31), வேட்டைத் தடுப்பு காவலர் பூல்பாண்டி, செல்வமணி, அனந்தகுமார், மயக்கமருந்து செலுத்தும் மருத்துவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தனர். வனத் துறையினர் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட 5 பேரை கரடி கடித்து குதறிவிட்டு தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கரடியை பிடிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.
கரடியை பிடிங்க - வசந்த குமார்
சட்டசபையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் (நாங்குநேரி), நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கிராமங்களில் கரடி புகுந்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, உடனடியாக அந்த கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
உயிரோடு பிடிக்க முயற்சி - சீனிவாசன்
இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கிராமங்களில் கரடி புகுந்ததாக தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது வனத்துறையினரின் கடமை. எனவே, கரடியை உயிரோடு பிடித்து பொதுமக்களைப் பாதுகாக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.