திருச்செங்கோடு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி
திருச்செங்கோடு அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே கும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(56). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரபாகரனுக்கு நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள நிலத்தை பார்ப்பதற்கு மனைவி கவிதா(45), மகன், அஸ்வந்த்(20) என குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். நிலத்தைப் பார்த்துவிட்டு காரில் மீண்டும் ஈரோடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். அஸ்வந்த் கார் ஓட்டிச் சென்றுள்ளார்.
அஸ்வந்த் ஓட்டிச் சென்ற கார் திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பெங்களூருவிலிருந்து நாமக்கல் நோக்கி எதிரே வேகமாக வந்த ஆல்பர்ட் ஜான் என்பவரின் கார் மோதி இரண்டு கார்களும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பிரபாகரன் அவரது மனைவி கவிதா, மகன் அஸ்வந்த், ஆல்பர்ட் ஜான் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தனர்.
ஆல்பர்ட் ஜானுடன் வந்த மற்ற மூன்றுபேரும் படுகாயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழத்தவர்களின் உடல்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எலச்சிப்பாளையம் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.