சென்னை விமான நிலையத்தை கார் குண்டு வைத்துத் தகர்க்க சதி...!
இதையடுத்து மாநில அரசுகள் அனைத்தும் எச்சரிக்கப்பட்டுள்ளன. கார் குண்டு மூலம் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தவும் சதித் திட்டம் தீ்ட்டப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவஹாத்தி ரயிலில் குண்டு வெடித்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறது என்று மத்திய உளவு பிரிவும் எச்சரித்துள்ளது.
மேலும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மே 2 ந்தேதி மத்திய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு பிராந்திய துணை ஆணையர் சரத் சீனிவாஸ் சார்பில், தென்னிந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் சென்னை, கொச்சின், ஹைதராபாத், பெங்களூர் ஆகிய சர்வதேச மற்றும் முக்கிய விமான நிலையங்களில் கார் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படலாம் அதனால் எச்சரிக்கையுடன் இருக்கவும். பாதுகாப்பை பலப்படுத்தவும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கார்பார்க்கிங் மற்றும் நுழைவாயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க விமான பாதுகாப்பு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். பயணிகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
மேலும் விமான நிலையத்திற்குள் பார்க்கிங் பகுதி தவிர, வேறு எங்கும் வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.