காட்பாடி அருகே கோரவிபத்து.. லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காட்பாடி: காட்பாடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காட்பாடியை அடுத்த சையனம்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் மாதனூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த குமார், மனைவி எஸ்தர் ராணி 50, மகன் கார்த்தி 30, மற்றும் உறவினர்களுடன் மாதனூருக்கு தனது காரில் இன்று மாலை திரும்பி கொண்டிருந்தார். காரை குமார்தான் ஓட்டியுள்ளார்.
சேர்க்காடு கூட்டுசாலை அருகே கார் வந்துகொண்டிருந்தது. அங்கே சாலை ஓரம் ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிமாக கார் நிலைதடுமாறி லாரியின் மீது பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலமாக நொறுங்கியது. இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த குமார், மனைவி எஸ்தர்ராணி, மகன் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் அவர்களுடன் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்கள் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இந்த கோர விபத்து குறித்து மேல்மாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.