கார் கம்பெனிகளுக்கு ஷாக் கொடுத்த ''மேலிடம்"!
சென்னை: கார் நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு முன்பு ஷாக் கொடுத்துள்ளனராம் சில மேல்மட்டப் புள்ளிகள். இதனால் பெரும் செலவு ஏற்பட்டு விட்டதாம் இந்த கார் நிறுவனங்களுக்கு.
அதிகாரம் உள்ள டிவிக்கு தீபாவளிக்கு விளம்பரம் தருவதற்காகத்தான் இந்த நெருக்குதல் வந்ததாம் உயர் மட்டத்திலிருந்து. அதிலிருந்து கார் நிறுவனங்களை தப்ப விடாமல் கிடுக்கிப் பிடி போட்டு காரியத்தை சாதித்து விட்டனராம் புள்ளிகள்.
இந்த நெருக்குதல் காரணமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் அப்செட்டாகி விட்டனவாம்.
தீபாவளி பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பாக அனைத்து மாண்புகளையும் கூப்பிட்டு வழக்கம் போல அசைன்மென்ட் கொடுத்துள்ளது மேலிடம். அதன்படி ஆளும் டிவிக்கு தேவையான அளவுக்கு விளம்பரங்களை உங்களது துறை மூலம் வாங்கித் தர வேண்டும் என்பதே உத்தரவு.
மேலும் இன்னின்னார் இந்தத் தொகைக்கு விளம்பரம் பெற வேண்டும் என்று லிஸ்ட் போட்டுக் கொடுத்து விட்டார்களாம்.
வாங்கிடலாம் என்று தெம்புடன் பட்டியலுடன் தயாராகி வந்தனர் கரை வேட்டிப் புள்ளிகள் இந்த நேரத்தில்தான் சிறைவாசம் குறுக்கிட்டு விட்டது. இதனால் அத்தனை மாண்புகளும் உற்சாகம் போய் காற்று பிடுங்கப்பட்ட பலூன் போல சோகத்தில் தொங்கிப் போய் விட்டனர். அதே வேகத்தில் விளம்பரம் வாங்க வேண்டியதையும் மறந்து விட்டனர்.
இதனால் டிவி சேனலும் கூட சோகமாகி விட்டதாம். விளம்பரமே கிடைக்காதோ என்ற அச்சத்தில்.
இந்த நிலையில்தான் தீபாவளிக்கு முன்பே ஜாமீனில் வெளி வர மறுபடியும் மேல் மட்டம் மூலமாக மாண்புகளுக்கு ஒதுக்கப்பட்ட விளம்பர வேலை நினைவூட்டப்பட்டது. இதையடுத்து மாண்புகள் சுறுசுறுப்பாக களம் இறங்கினர்.
இந்த நிலையில் போக்குவரத்துறை உயர் புள்ளி, புதிய வாகனப் பதிவை நிறுத்தி வைக்குமாறு வாய் வழி உத்தரவைப் பிறப்பிக்க தமிழகம் முழுவதும் புதிய வாகனப் பதிவை நிறுத்தி விட்டார்களாம். இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ந்து போயின.
அதில் வெளிநாட்டு கார் நிறுவனம் மட்டும் அடடா, மேட்டர் இதுதானா என்று புரிந்து கொண்டு 50 லட்சம் கொடுத்து விளம்பரம் போட்டுக்கோங்கோ என்று கூற, அவர்களது கார்களுக்கு மட்டும் அக்டோபர் 21ம் தேதி பதிவு நடைபெற்றதாம். மற்ற நிறுவனங்களுக்கு சிக்கலாகி விட்டதாம்.
இப்படியெல்லாமா செய்வார்கள்... ?